தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம் உடல்நலக் குறைவு காரணமாக 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். சமீபத்தில் இவரது பணி இடமாற்றம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மற்றும் தி.மு.க இடையே பெரும் அரசியல் சர்ச்சை வெடித்த நிலையில், தற்போது இதயக் கோளாறு மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏப்ரல் 30-ம் தேதி வரை அவர் விடுப்பு எடுத்துள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தலை நியாயமாக நடத்தும் பொருட்டு, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றியது. அவருக்கு பதில் சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். அவரும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என தெரிவித்து சந்தீப் மிட்டல் நியமனத்தை எதிர்த்து தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, டேவிட்சன் தேவாசீர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவு திரும்பபெறபட்டது. இதனால் சந்தீப் மிட்டல் ஆயுதப்படை டி.ஜி.பி-யாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் டேவிட்சன் தேவாசீர்வாதம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக தொடர்வார் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் முன்னாள் இயக்குநருமான டேவிட்சன் தேவாசீர்வாதம், உடல்நலக் குறைவு காரணமாக 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநராகவும், கூடுதலாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆயுதப்படை டி.ஜி.பி-யாகவும் மார்ச் 2-ம் தேதி முதல் டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியாற்றி வந்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இவர் இந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏப்ரல் 9-ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 30 தேதி வரை மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டி.ஜி.பி) எழுதியுள்ள கடிதத்தில், “ஏற்கனவே இதயக் கோளாறு காரணமாக ஆஞ்ஜியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது உயர் ரத்த அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். சமீபத்தில் ஏற்பட்ட உடல் நல அசௌகரியத்தால், மருத்துவர்கள் முழு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, ஏப்ரல் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை மொத்தம் 22 நாட்களுக்கு அவர் மருத்துவ விடுப்பில் செல்ல அனுமதிக்க வேண்டும்” என கடிதம் எழுதி உள்ளார். இதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் அவர் இணைத்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


