மத்தியக் கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் போர்ப் பதற்றத்தின் காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் ஏற்படும் என பிரபல சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான 'மூடிஸ்' (Moody's) எச்சரித்துள்ளது. வரும் 2026-27ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாகக் குறையும் என மூடிஸ் நிறுவனம் தனது புதிய அறிக்கையில் கணித்துள்ளது. முன்னதாக, இந்தியாவின் பொருளாதார நிலை சீராக இருக்கும் என மூடிஸ் மதிப்பிட்டிருந்தது. குறிப்பாக, ஜிடிபி வளர்ச்சி 6.8 சதவீதமாகவும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் அதாவது 2.4 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனவும் முன்பு நேர்மறையாகக் கணித்திருந்தது. ஆனால், தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் இந்தக் கணிப்பைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளன. என்ன காரணம்? இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் இடையே நீடிக்கும் போர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போர் காரணமாக சர்வதேச அளவில் எரிசக்தி மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடுமையான தடைகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இந்த பாதிப்பால், உலக சந்தையில் எரிபொருள் விலை தவிர்க்க முடியாமல் உயரும். இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ளதால், சர்வதேச கடல்வழி வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களின் விலை உலகச் சந்தையில் உயரும் அபாயம் உள்ளது. பணவீக்கம் 4.8% ஆக அதிகரிப்பு இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு பெருமளவு இறக்குமதியையே நம்பியுள்ளது. எனவே, சர்வதேச எரிபொருள் விலை உயர்வு, இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயரும். இதுவே பணவீக்கம் 4.8% ஆக அதிகரிக்கக் காரணமாக அமையும். கச்சா எண்ணெய்க்கு இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு, மத்திய கிழக்கு போர்ச் சூழல் பணவீக்கத்தை அதிகரிப்பதோடு, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. தொலைதூர மத்திய கிழக்கில் நடக்கும் போர், இறக்குமதியை நம்பியுள்ள இந்தியாவின் நுகர்வோர் பாக்கெட்டுகளையும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் நேரடியாகப் பதம் பார்க்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

