தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் ரயில்வே கேட் அருகில் ஓடும் சக்கரை பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணி வெகு மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் கரைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகளுக்கான துவக்க விழா கடந்த மார்ச் மாதம் முதல்வாரத்தில் தொடங்கப்பட்டது. 1315 கிலோமீட்டர் தூரத்திற்கு மொத்தம் 299 பணிகள் ரூ.26.16 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக அனைத்து தூர்வாரும் பணிகளும் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடைமடை பகுதி வரை தண்ணீர் தடையின்றி சென்று சேர வேண்டும் என்பதற்காக தற்போது பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில்வே கேட் அருகில் ஓடும் சக்கரை பாசன வாய்க்கால் தலைப்பிலிருந்து தூர் வாரும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் தூர் வாரும் மண்ணை கரையிலேயே கொட்டு கரையை வலுப்படுத்தி வருகின்றனர். பொக்லைன் இயந்திரத்தை கொண்டு அள்ளப்படும் மண்ணை சக்கரை பாசன வாய்க்கால் இருகரைகளிலும் கொட்டி இயந்திரத்தால் அழுத்தப்படுகிறது. இதனால் கரை வலுவாகிறது. இதனால் கடைமடை வரை தண்ணீர் விரைவாக செல்லும் வகையில் தூர் வாரப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் கூறுகையில், வரும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டும் என்று போர்க்கால அடிப்படையில் விரைந்து நடந்து வருகிறது. விரைவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் தரமாக நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மேட்டூர் அணையில் வழக்கம் போல் தண்ணீர் திறந்தால் அடுத்த சில நாட்களிலேயே கடைமடை வரை தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் இந்த தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் தூர்வாரப்படும் மண் பாசன வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இதனால் கரையும் வலுவாகிறது. இந்த பணிகள் மே மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடைமடை விவசாயிகளும் தடையின்றி தண்ணீரை பெற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவுப்படுத்தியதற்காக பாராட்டும், நன்றியும் அனைத்து விவசாயிகள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


