ஒரு திரைப்படம் ஒரு மொழியில் வெற்றி பெறும்போது அதை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று தான். மற்ற மொழிகளில், ஒரிஜினல் படத்தை இயக்கிய இயக்குனர்களோ அல்லது மற்ற இயக்குனர்கள் யாராவது இயக்குவார்கள். அதில் ரீமேக் படங்கள் வெற்றி பெறுமா என்று கேட்டால் சந்தேகம் தான். அந்த வகையில் தமிழில் பிரம்மாண்ட வெற்றிப்படமாக அமைந்த கமல்ஹாசன் நடித்த மூன்றாம்பிறை திரைப்படம் இந்தியில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த படத்தின் முடிவை ரிலீஸ்க்கு முன்பே பாட்ஷா படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கணித்துள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார், அதில் பேசிய அவர், இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் 'மூன்றாம் பிறை' படத்தை இந்தியில் 'சத்மா' (Sadma) என்ற பெயரில் எடுத்தபோது ரிலீஸ்க்கு முன்பு என்னிடம் படம் எப்படி இருக்கு என்று கேட்டார். நான் மூன்றாம் பிறை சூப்பர் ஹிட்டு, ஆனால் இந்தியில் ஓடாது சார் என்று சொன்னேன். அதற்கு அவர் ஏன் அப்படி சொல்றீங்க என்று கேட்டார். மூன்றாம் பிறை படம் நடிக்கும்போது கமல் சார் 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். ஸ்ரீதேவியும் நிறைய படங்கள் நடித்துவிட்டார். நீங்களும் அதிகமான படங்கள் இயக்கி வெற்றியை கொடுத்துவிட்டீர்கள். உங்களுக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. அதனால் எதிர்பார்ப்பு சரியாக இருக்கும். ஆனால் இந்தியில் வேறு மாதிரி. கமல் ஸ்ரீதேவி அதிக படங்களில் நடிக்கவில்லை. இப்படத்தில் ஸ்ரீதேவி ஒரு 6 வயது குழந்தையின் மனநிலை கொண்டவராக நடித்திருந்தார். கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையில் ரொமான்ஸ் கிடையாது. கமல் ஒரு சிறந்த நடன கலைஞர், ஸ்ரீதேவியும் அபாரமாக ஆடக்கூடியவர். ஆனால் இப்படத்தில் ஒரு டான்ஸ் கூட இல்லை. சில்க் ஸ்மிதாவுடன் ஒரு பாடல் இருந்தாலும், அது ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. ஒட்டுமொத்தமாக சிறப்பாக படம் ஆனால், இது எந்த அளவுக்கு வொர்க்அவுட் ஆகும் என்பது எனக்கு சந்தேகம் தான் சார் என்று சொன்னேன். அவர் பார்க்கலாம் என்று சொன்னார், அதன்படி படம் ரிலீஸ் ஆனது. முதல் நாள் பெரிய ஓப்பனிங் இருந்தது. எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. அதே சமயம் அடுத்த நாள் ரசிகர்கள் மனநிலை வேறு மாதிரியாக இருந்தது. இந்த படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. கமல் - ஸ்ரீதேவி என்றாலே கிளாமர் மற்றும் ரொமான்ஸ் என எதிர்பார்த்த இந்தி ஆடியன்ஸுக்கு, 'சத்மா' (மூன்றாம் பிறை இந்தி) கவனத்தை ஈர்க்கவில்லை. இந்திய சினிமாவில் ஒரு 'கிளாசிக்' திரைப்படமாக 'மூன்றாம் பிறை' பேசப்படுவதற்கு அதன் அழுத்தமான கதையும், பாலு மகேந்திராவின் இயக்கமுமே காரணம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


