தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வரும் நடிகர் வடிவேலு, அவ்வப்போது பாடல்களையும் பாடியுள்ள நிலையில், அவர் பாட மறுத்த நிலையில், ஏ,ஆர்.ரஹ்மான் சொன்னதால், அவர் பேச்சை கேட்டு பாடியுள்ளார். அந்த பாடல் பெரிய ஹிட்டடித்தது. பல படங்களில் காமெடி மற்றும் சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் வடிவேலு. இவர் முழுநீள குணச்சித்திர வேடத்தில் நடித்த படம் மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு வெளியான இந்த படம் உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசி படம். இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரும் ஹிட்டானது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ராசா கண்ணு’ பாடல் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது. இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுத, பாடலை வடிவேலு அற்புதமாக பாடியிருந்தார். இந்த பாடல் உருவான விதம் குறித்து பேசிய கவிஞர் யுகபாரதி, படத்தில், கிணறு சீன் முடிந்த பின்பு மாமன்ன் மலை மேல் நிற்கும்போது இந்தப் பாடல் வரும் என்று நினைத்தோம். ஆனால் எதிர்பாராத இடத்தில் வந்தது. பாடலை எழுதி முடித்தவுடன் இதை யார் பாடலாம் என்று முடிவு செய்ய வடிவேலு பாடுவார் என்று முடிவானது. இதற்காக வடிவேலுவை கூப்பிடும்போ அவர் வரவில்லை. பாடல் மெட்டு வரி அனுப்பினோம். ஆனால் மெட்டை கேட்ட அவர், இது மிகவும் கடினமான மெட்டாக இருக்கிறது, நான் பாடவில்லை என்று சொன்னார். ஆனாலும் அவரை சம்மதிக்க வைத்து ரெக்கார்டிங்ககு அழைத்து சென்றபோது, அவர் எவ்வளவோ முயன்றும் அவரால் பாட முடியவில்லை. வியர்த்து விறுவிறுத்து போன அவர் தன்னால் பாட முடியாது என்று சொல்ல, உடனே ஏ.ஆர்,ரஹ்மான், இவருக்கு ஒரு காபியை கொடுத்து, ரிலாக்ஸ் செய்தார். அதன்பிறகு, நீங்கள் நாகூர் அனிபா பாடல்களை பாடுங்கள் என்று சொல்ல, வடிவேலுவும் சரளமாக அந்த பாடலை பாடினார். அடுத்து பழைய பாடல்களை பாட சொல்ல, அதையும் வடிவேலு பாடினார். அதன்பிறகு, இந்த பாடலை பாட சொன்னார். வடிவேலுவும், அந்த பாடலை சரளமாக பாட தொடங்கினார். மொத்த பாடலையும் 15 நிமிடத்துக்குள் பாடி முடித்துவிட்டார் வடிவேலு என்று யுகபாரதி கூறியுள்ளார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவற்பை பெற்று வருகிறது. வடிவேலு பாட முடியாமல் தவித்த ஒரு பாடல், இன்று அந்த படத்தின் ஐகானிக் பாடலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



