சினிமாராவுத்தரிடம் சொத்துக்களை மிரட்டி வாங்கினாரா விஜயகாந்த்? பல வருட ரகசியத்தை உடைத்த லியாகத் அலிகான்
தமிழ் சினிமாவில் நட்பு, என்று எடுத்துக்கொண்டால் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் கேப்டன் விஜயகாந்த் மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர். மதுரையில் தொடங்கிய இவர்களது நட்பு, கோலிவுட்டில் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியது. ஆனால், காலப்போக்கில் இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு பிரிந்தனர். தற்போது இருவருமே உயிருடன் இல்லை என்றாலும் அவர்களை பற்றி பலரும் தங்கள் நினைவுகளை பகிந்து வருகின்றனர். அந்த வரிசையில், விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான லியாகத் அலிகான், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விஜயகாந்த் இப்ராஹிம் ராவுத்தர் பிரிவின் பின்னணியில் இருந்த எதார்த்தமான காரணங்களையும், சொத்து விவகாரங்கள் குறித்த உண்மைகளையும் பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சென்னையில் விஜயகாந்துக்கோ அல்லது ராவுத்தருக்கோ பெரிய அலுவலகக் கட்டிடங்கள் கிடையாது. அந்த சமயத்தில், ராவுத்தர் ஒரு கட்டிடம் கட்டியிருந்தார். விஜயகாந்தின் மகன் பிரபாகரனிடம் ஒருமுறை ராவுத்தரின் மகன் (அபு), "இது எங்க பில்டிங்டா, உங்களுக்கும் பில்டிங் இருக்கா?" என்று விளையாட்டாக கேட்க, பிரபாகரன் அப்பா விஜயகாந்திடம் இது பற்றி கேட்டுள்ளார். இதைக் கேட்ட விஜயகாந்த் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். ஒரு தந்தையாக தன் பிள்ளைக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த அவர், என்னிடம் "முதலில் என் பெயரில் ஒரு கட்டிடம் கட்டிவிட்டு, பிறகு அவன் பெயரில் ஒரு கட்டிடம் கட்டலாம் அல்லவா?" என்று ஆதங்கப்பட்டுள்ளார். இது ராவுத்தர் மீது அவர் கொண்ட கோபம் அல்ல, மாறாகத் தன் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த ஒரு தார்மீக ஏக்கம் தான். ராவுத்தர் வசம் இருந்த விஜயகாந்தின் சொத்துகளை, விஜயகாந்த் தரப்பினர் மிரட்டி வாங்கியதாக ஒரு பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பல காலமாக உள்ளது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ராவுத்தரை மிரட்டி விஜயகாந்த் சொத்துகளை வாங்கினார்கள் என்பது முற்றிலும் பொய். சொல்லப்போனால், விஜயகாந்த் பல சொத்துக்களை ராவுத்தருக்காக விட்டுக்கொடுத்தார். தே.மு.தி.க கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்த சுந்தர்ராஜன் என்பவர் பெயரில் சில சொத்துகள் வாங்கப்பட்டிருந்தன. அவர் அ.தி.மு.க-வுக்குச் சென்றபோது, அந்தச் சொத்துகளை மட்டும் விஜயகாந்த் திரும்பக் கேட்டார். அதுதான் சர்ச்சையானதே தவிர, ராவுத்தருக்கும் இதற்கும் நேரடித் தொடர்பு இல்லை. விஜயகாந்தைச் சுற்றியிருந்த சிலர் (தம்பிகள் மற்றும் உறவினர்கள்) கொடுத்த அழுத்தங்கள் மற்றும் சில பேச்சுவார்த்தைகள் இவர்களுக்கு இடையிலான விரிசலுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், விஜயகாந்த் எப்போதும் பெருந்தன்மையுடன்தான் நடந்துகொண்டார் என்று லியாகத் அலிகான் கூறியுள்ளார்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.