விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட குளத்துள்வாய்பட்டி பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, நான்கு கிராம மக்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சுரைக்காய்பட்டி ஊராட்சியில் குளத்துள்வாய்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 45 வீடுகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முகாமில் இருப்பவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு கிராம மக்களுக்கும் முகாம் மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக, கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்குச் செல்வதில் சிக்கல் நீடிப்பதாகவும், முகாம் அருகே போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அங்குப் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், முகாம் மக்கள் முன்பு தங்கியிருந்த பழைய ஷெட்களைத் தங்களது விவசாய விளைபொருட்களை உலர்த்தும் களமாகப் பயன்படுத்த வழங்க வேண்டும் என்பதும் இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. கடந்த 17-ம் தேதி விவசாயப் பாதையைச் சமன் செய்யும் பணியின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாகப் பதற்றம் அதிகரித்தது. "முகாமை இடமாற்றம் செய்தால் மட்டுமே வாக்களிப்போம்" என்பதில் கிராம மக்கள் உறுதியாக இருந்தனர். இன்று காலை 7 மணிக்குத் தேர்தல் தொடங்கிய நிலையில், குளத்துள்வாய்பட்டி, குமாரகிரி, சோத்து நாயக்கன்பட்டி, அம்மா மடம் ஆகிய 4 கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். வாக்குச்சாவடியில் மொத்தம் 983 வாக்காளர்கள் இருந்தும், காலை 11 மணி நிலவரப்படி வெறும் 8 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். மக்கள் எவரும் வராததால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. "வருவாய்த்துறை மற்றும் காவல்துறையின் அலட்சியமே இந்தப் பிரச்சினை இவ்வளவு பெரிதாகக் காரணம். முகாமை மாற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும்," என கிராம மக்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர். நாங்குநேரியிலும் தேர்தல் புறக்கணிப்பு: இதேபோல், நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்திலும் தேர்தல் புறக்கணிப்பு அரங்கேறியது. அங்குள்ள 290-வது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட 969 வாக்காளர்கள் ஒருவர்கூட வாக்களிக்க வரவில்லை. கடந்த மார்ச் 2-ம் தேதி நடந்த இரட்டை கொலை வழக்கில் இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்று கூறி அக்கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அந்த வாக்குச்சாவடியும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருவது அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. - க.சண்முகவடிவேல்
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



