தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தீவிரப் பிரசாரப் பணிகளை முடித்துக்கொண்டு, ஓய்வெடுப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கொடைக்கானல் சென்றடைந்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடந்த ஒரு மாத காலமாகத் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓய்வின்றி களப்பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்தது. தேர்தல் பரபரப்புகளுக்குப் பிறகு ஓய்வெடுப்பதற்காக, ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து தனது குடும்பத்தினருடன் தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். செய்தியாளர்கள், சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது" என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த முதல்வர், தனது கட்டை விரலை உயர்த்தி (Thumbs Up) காட்டி, "சூப்பராக உள்ளது, வெற்றி வாய்ப்பு எங்களுக்குத் தான்" என மிகுந்த தன்னம்பிக்கையுடன் தெரிவித்துவிட்டு கார் மூலம் கொடைக்கானல் புறப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் பாம்பர்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். இதற்குப் பின்னால் சுவாரசியமான தேர்தல் 'சென்டிமென்ட்' இருப்பதாகக் கருதப்படுகிறது. 2019 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்குப் பின் இதே பாம்பர்புரம் விடுதியில் தங்கியிருந்தார். அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தல் போதும் கொடைக்கானலில் தங்கியிருந்த நிலையில், வெற்றி பெற்று முதல்முறையாகத் தமிழக முதல்வரானார். 2024 மக்களவைத் இந்தத் தேர்தலின் போதும் கொடைக்கானலில் தங்கியிருந்த நிலையில், தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதே பாணியில், தான் முன்பு தங்கியிருந்த அதே விடுதி அறையிலேயே தங்கி முதல்வர் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக மாலை கொடைக்கானல் சென்றடைந்த முதல்வர், அங்கு சுமார் 3 முதல் 4 நாட்கள் தங்கி ஓய்வெடுப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


