ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் 5 வாரங்களை கடந்த நிலையில் இன்னும் முடிந்த பாடில்லை. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையில் உள்ளன. பல நாடுகளில் பெட்ரோ - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வரிசையில் பாகிஸ்தானும் இடம் பெற்றுள்ளது. கடந்த 5 வாரங்களில் பாகிஸ்தானில் பெட்ரோல் - டீசல் விலை பெரும் உயர்வை சந்தித்துள்ளது. பட்ஜெட் பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்... தாய்லாந்தில் இந்தியர்களுக்காக காத்திருக்கும் பரிசு; ட்ரிப் போலாமா? இந்நிலையில், பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக் வியாழக்கிழமை மீண்டும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வை அறிவித்தார். இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு பாகிஸ்தான் ரூபாயில் 137.24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 184.49 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால், பாகிஸ்தானில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் பாகிஸ்தான் ரூபாய்க்கு 458.4 க்கும், அதிவேக டீசல் ஒரு லிட்டர் பாகிஸ்தான் ரூபாய்க்கு 520.35 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப்புடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மாலிக் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, எரிசக்தி அமைச்சகம் திருத்தப்பட்ட விலைகளை உறுதிப்படுத்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதாக பாகிஸ்தான் ஊடகமான 'டான்' (Dawn) செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய விலைகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று மாலிக் தெரிவித்தார். மேலும், மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு பாகிஸ்தான் ரூபாயில் 34.08 உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு லிட்டர் பாகிஸ்தான் ரூபாயில் 457.80 ஆக உள்ளது. மானியம் செய்தியாளர் சந்திப்பில் நிதியமைச்சர் ஔரங்கசீப் சில நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தார். அதாவது, இருசக்கர வாகனங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதம் அதிகபட்சம் 20 லிட்டர் வரை, லிட்டருக்கு பி.கே.ஆர் (PKR) 100 மானியம் வழங்கப்படும். சிறு விவசாயிகளுக்கு ஒருமுறை மட்டும் ஏக்கருக்கு பி.கே.ஆர் 1,500 மானியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நகரங்களுக்கு இடையேயான மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு லிட்டருக்கு பி.கே.ஆர் 100 மானியம் வழங்கப்படும். இதன் விலைகள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்யப்படும். உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு நேரடியாக பி.கே.ஆர் 70,000 உதவித்தொகை வழங்கப்படும். பெரிய போக்குவரத்து வாகனங்களுக்கு மாதம் பி.கே.ஆர் 80,000-மும், நகரங்களுக்கு இடையேயான பயணிகள் மற்றும் பொதுச் சேவை வாகனங்களுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க மாதம் பி.கே.ஆர் 1,00,000-மும் வழங்கப்படும். குறைந்த வருமானம் கொண்ட பயணிகள் பயன்பெறும் வகையில் ரயில் சேவைகளுக்கும் மானியம் விரிவுபடுத்தப்படும் என்று ஔரங்கசீப் தெரிவித்தார். இந்த நிவாரண நடவடிக்கைகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதற்கான காலக்கெடு எதையும் அவர் குறிப்பிடவில்லை.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



