ஐபிஎல் தொடரில் அதிகளவு ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஆர்சிபி - சென்னை அணிகள் இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 251 ரன்கள் டார்கெட்: தொடக்கத்தில் மைதானம் பந்துவீச்சிற்கு சற்று ஒத்துழைத்தாலும் சால்ட் 46 ரன்ள், கோலி 28 ரன்கள் எடுத்து அவுட்டாக, படிக்கல் அதிரடியாக 50 ரன்களையும், படிதார் 48 ரன்களையும் எடுக்க, டிம் டேவிட் 25 பந்துகளில் 70 ரன்கள் எடுக்க சென்னைக்கு 251 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சரிந்த விக்கெட்டுகள்: இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு டஃபி, புவனேஷ்வர் குமார் குடைச்சல் கொடுத்தனர். சாம்சன் 9 ரன்னில் அவுட்டாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆயுஷ் மாத்ரே 1 ரன்னில் அவுட்டாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்னில் அவுட்டானார். சர்ப்ராஸ் கான் அதிரடி: ஆனால், மறுமுனையில் சர்ப்ராஸ் கான் அதிரடியாக ஆடினார். அவர் பவுண்டரியாக விளாச சென்னை அணியின் ஸ்கோர் ஏறியது. அபாரமாக ஆடிய அவர் குருணல் பாண்ட்யா பந்தில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு இறங்கி வந்தபோது ஸ்டம்பிங் ஆனார். அவர் 25 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 50 ரன்கள் எடுத்து அவுட்டாக, கார்த்திக் சர்மாவும் 6 ரன்னில் அவுட்டானார். பிரசாந்த் வீர்- ஓவர்டன் போராட்டம்: அடுத்து சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஷிவம் துபே 13 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதையடுத்து, பிரசாந்த் வீர் - ஜேமி ஓவர்டன் ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி தொடக்கத்தில் சற்று நிதானம் காட்டினாலும் இலக்கு பெரியது என்பதால் பின்னர் அதிரடிக்கு மாறினர். குருணல் பாண்ட்யா வீசிய ஒரே ஓவரில் பிரசாந்த் வீர் 3 பவுண்டரி. 1 சிக்ஸர் விளாசினார். ஓவர்டன் அதிரடியாக மட்டுமே ஆடினார். இந்த பார்ட்னர்ஷிப் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தது. கடைசி 6 ஓவர்களில் சென்னைக்கு 94 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்சிபி வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. ஆர்சிபி அணி அழுத்தம் இல்லாமலே ஆடியது. புவனேஷ் தந்த திருப்பம்: சென்னை அணிக்கு கடைசி 5 ஓவர்களில் 86 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிறப்பாக ஆடிய பிரசாந்த் வீரை புவனேஷ்வர்குமார் அவுட்டாக்கினார். அவர் 29 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஓவர்டன் தனி ஆளாக போராடினார். அவர் பவுண்டரிகளாக விளாசினார். ஆனாலும், கையில் விக்கெட்டுகள் இல்லாதது அவர்களுக்கு பின்னடைவை உண்டாக்கியது. சிறப்பாக ஆடிய ஓவர்டன் 16 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்து சுயாஷ் சர்மா பந்தில் அவுட்டானார். அதே ஓவரில் கம்போஜ் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை அபினந்தன் வீணடித்தார். 200 ரன்கள் கடந்த சென்னை: சென்னைக்காக அதிரடி காட்ட முயற்சித்த நூரை புவனேஷ்வர் அவுட்டாக்கினார். அவர் 8 ரன்கள் எடுத்து அவுட்டானார். கம்பாேஜ் கடைசியில் சிக்ஸரும், பவுண்டரியும் விளாச சென்னை 200 ரன்களை கடந்தது. கடைசி ஒரு ஓவரில் சென்னைக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. கடைசியில் ஹென்றி 2 ரன்னில் அவுட்டாக சென்னை அணி 19.4 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், ஆர்சிபி அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி வெற்றி: புவனேஷ்வர்குமார் 4 ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், அபினந்தன் 3.4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி 4 ஓவர்களில் 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும், குருணல் பாண்ட்யா 3 ஓவர்களில் 31 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். அதேசமயம், சுயாஷ் சர்மா 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். சென்னை அணி இந்த தொடரில் ஆடிய 3வது போட்டியில் கிடைத்த 3வது தோல்வி ஆகும். ஆர்சிபி அணிக்கு இது 2வது போட்டியில் கிடைத்த 2வது வெற்றி ஆகும்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


