ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னைக்கு எதிராக ஜடேஜா: சென்னை அணியின் முன்னாள் கேப்டன், நட்சத்திர வீரர் ஜடேஜா ராஜஸ்தானுக்காகவும், ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாம்சன் சென்னைக்காகவும் ஆடியதால் இந்த போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சென்னை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசியது. 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சென்னைக்காக மேத்யூ ஷார்ட் - சர்ப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தனர். இந்த அணி சென்னையை சரிவில் இருந்து காப்பாற்ற முயற்சித்தபோது ராஜஸ்தான் அணிக்காக முதல் ஓவரை வீச வந்தார் ஜடேஜா. காலி செய்த ஜடேஜா: அவர் வீசிய முதல் பந்து டாட் பாலாக மாற, அடுத்த பந்திலே சர்ப்ராஸ் கானை காலியாக்கினார். நிதானமாக ஆடி வந்த சர்ப்ராஸ் கான் 12 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 17 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு வந்த ஷிவம் துபே ஜடேஜா பந்தை சிக்ஸருக்கு அனுப்பி அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தார். ஆனால், அந்த ஓவரின் கடைசி பந்தையும் சிக்ஸருக்கு அனுப்ப முயற்சித்து 6 ரன்களில் அவுட்டானார். ஷிவம் துபேவை அவுட்டாக்கிய ஜடேஜா துப்பாக்கியால் சுடுவது போன்ற ரியாக்ஷன் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பின்னர், சென்னை அணியின் மொத்த பேட்டிங் ஆர்டருமே நிலைகுலைந்தது. 300 ஸ்பார்ட்ன் படத்தில் வருவது போன்ற கெட்டப்பில் வந்த ஜடேஜா, சென்னை அணிக்கு மிகப்பெரிய குடைச்சலை உருவாக்கிவிட்டார்.சென்னை அணிக்காக பல போட்டிகளில் வெற்றியைத் தந்த தன்னை ட்ரேட் செய்ததன் அதிருப்தியின் வெளிப்பாடா? என்றும் அவர் கொண்டாடிய விதம் இருந்தது. ரசிகர்கள் ஷாக்: ஜடேஜா தனது முதல் சீசனை ராஜஸ்தான் அணிக்காகவே ஆடி அறிமுகமானார். பின்னர், அனைத்து சீசன்களும் சென்னைக்காகவே ஆடினார். சென்னை அணியின் நட்சத்திர வீரராகவும், சிஎஸ்கே ரசிகர்களால் தளபதி என்றும் அழைக்கப்பட்டார். ஜடேஜா சென்னை அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


