கடந்த மார்ச் மாத இறுதியில் துருக்கி - கிரீஸ் நாடுகளுக்கு இடைப்பட்ட ஏஜியன் கடல் பகுதியில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஏப்.1 வரை நீடித்த இந்த நடுக்கங்களின் போது, வானில் செங்குத்தான ஒளித்தூண்கள் மற்றும் மின்னும் ஒளிக்கற்றைகள் தோன்றிய புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த விசித்திரமான ஒளிப்பிழம்புகள் உண்மையா? ஏதேனும் கிராபிக்ஸ் காட்சிகளா என்று மக்கள் வியந்த நிலையில், இவை ‘நிலநடுக்க ஒளி’ என்றழைக்கப்படும் ஒரு அரிய இயற்கை நிகழ்வு என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சற்று முன்போ, நிலநடுக்கத்தின் போதோ? அதற்குப் பின்னரோ வானில் தோன்றும் மின்னல்கள், ஒளிப்பந்துகள், நீண்ட ஒளித்தூண்களே 'நிலநடுக்க ஒளி' எனப்படுகின்றன. இவை பல நூற்றாண்டுகளாக மக்களால் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மிக அரிதான நிலநடுக்கங்களில் மட்டுமே இவை தென்படுகின்றன. சமீபத்தில் ஏஜியன் கடல் பகுதியில் தோன்றிய இந்த ஒளிக்கற்றைகளை கண்ட சிலர், இவை ஏதோ 'தேவதைகள்' என்றும், இன்னும் சிலர் இது ஒரு 'மாய உலகம்' (Simulation) என்றும் பலவாறாகக் கற்பனை செய்து பதிவிட்டனர். Unusual beams of light were observed in the skies over Turkey and Greece during the Aegean Sea earthquake. This phenomenon is believed to occur when powerful electrical charges build up in the Earth’s crust, ionizing the surrounding air and producing visible flashes or streaks... pic.twitter.com/fgCOE6qOjo — Earth (@earthcurated) April 2, 2026 இந்த ஒளி எப்படி உருவாகிறது என்பது குறித்து இன்னும் முழுமையான புரிதல் இல்லாவிட்டாலும், விஞ்ஞானிகள் முன்வைக்கும் வலுவான விளக்கம்; பூமியின் மேலோட்டில் உள்ள பிரமாண்டமான தட்டுகள் (Tectonic Plates) ஒன்றோடுஒன்று மோதும் போது கடும் அழுத்தம் உருவாகிறது. இந்த அழுத்தம் பாறைகளில் (குவார்ட்ஸ் போன்ற தாதுக்கள் நிறைந்த பாறைகளில்) மின்சாரத்தை உருவாக்குகிறது. இது ஒரு ராட்சத இயற்கை மின்கலன் செயல்படுவதைப் போன்றது. பாறைகளில் உருவாகும் இந்த மின்சாரம், பூமியின் பிளவுகள் வழியாக மேலெழும்பி வளிமண்டலத்தை அடைகிறது. இந்த மின்சாரம் காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மோதி, அவற்றை அயனியாக்கம் (Ionization) செய்கிறது. இது நியான் விளக்குகள் எரிவதை போன்ற ஒரு 'பிளாஸ்மா' நிலையை உருவாக்கி, வானில் ஒளிக்கற்றைகளாகத் தெரிகிறது. இந்த ஒளிக்கற்றைகளில் வெப்பமோ அல்லது நெருப்போ இருக்காது. செங்குத்தான பிளவுகள் கொண்ட பகுதிகளில் இத்தகைய ஒளி நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இது மந்திரமோ அல்லது அமானுஷ்ய நிகழ்வோ அல்ல; பூமிக்கடியில் நிலவும் அபாரமான ஆற்றலின் வெளிப்பாடே ஆகும். இயற்கையின் விந்தையான ஆற்றலை நமக்கு நினைவூட்டும் இந்த நிகழ்வு, ஆய்வக சோதனைகள் மூலம் ஓரளவிற்கு நிரூபிக்கப்பட்டாலும், இது குறித்த மேலதிக ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



