உலக அளவில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சில நாடுகள் இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தாலும், பல நாட்டுகளில் முக்கிய பயன்பாட்டு பொருளாக பிளாஸ்டிக் உருவெடுத்துள்ளது. பயன்படுத்திவிட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து உலக சுகாதார மையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது பிளாஸ்டிக் கழிவுகளால் கடலில் புதிய சூழல் உருவாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நடுக்கடல் என்றாலே மனித நடமாட்டம் இல்லாத, ஆழமான, அமைதியான பகுதி என்றுதான் நாம் நினைப்போம். ஆனால், கரையில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி, பசிபிக் பெருங்கடலின் இதயப்பகுதியில் புதிய அதிர்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் தூக்கி எறிந்த பிளாஸ்டிக் குப்பைகள், இன்று கோடிக்கணக்கான கடல் உயிரினங்களின் அழிவுகரமாக மாறியுள்ளன. 'பசிபிக் கழிவு மண்டலம்' (Great Pacific Garbage Patch) என்றழைக்கப்படும் இப்பகுதி, பல லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் கிடக்கும் இடமாகும். இதுவரை இது சுற்றுச்சூழல் சாபக்கேடாகவே பார்க்கப்பட்டது. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று ஒரு வியப்பூட்டும் உண்மையை சொல்கிறது: கடற்கரையோரம் மட்டுமே வாழக்கூடிய நண்டுகள், கடல் சாமந்திகள் மற்றும் சிப்பிகள், இப்போது இந்த மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளில் தங்களது காலனிகளை அமைத்து வருகின்றன. கடலில் இருந்து எடுக்கப்பட்ட 105 பிளாஸ்டிக் பொருட்களை ஆய்வு செய்ததில், 98% பொருட்களில் உயிரினங்கள் ஒட்டிக்கொண்டு வாழ்வது தெரிந்தது. இவை அங்கே தங்கி வாழ்வது மட்டுமல்லாமல், முட்டையிட்டு இனப்பெருக்கமும் செய்கின்றன. பிளாஸ்டிக் கயிறுகளில் முட்டைகள் உடன் இருக்கும் பெண் உயிரினங்களையும், குஞ்சுகளையும் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். 2011 ஜப்பான் சுனாமியின் போது கடலில் கலந்த அதே வகை உயிரினங்கள், இன்றும் அந்தப் பிளாஸ்டிக் கழிவுகளில் செழிப்பாக வளர்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையான மரக்கட்டைகள் அல்லது கடல் பாசிகள் கடலில் விரைவில் அழுகிவிடும். ஆனால், பிளாஸ்டிக் அழியாது. இந்த 'மரணமில்லா' தன்மைதான் உயிரினங்களுக்கு சாதகமாகிவிட்டது. பல ஆண்டுகளாகச் சிதையாமல் மிதக்கும் பிளாஸ்டிக் கயிறுகள் மற்றும் வலைகள், இந்த உயிரினங்களுக்கு தலைமுறை தலைமுறையாகத் தங்கும் ஒரு நிரந்தர வீட்டை வழங்குகின்றன. விஞ்ஞானிகள் இந்த வினோத சூழலுக்கு 'நியோ பெலாஜிக்' என்று பெயரிட்டுள்ளனர். அதாவது, கடற்கரை உயிரினங்களும், நடுக்கடல் உயிரினங்களும் இணைந்து வாழும் ஒரு புதிய கலப்பு உலகம். ஆய்வு செய்யப்பட்ட 103 பொருட்களில் 70% அதிகமானவற்றில் கடற்கரை உயிரினங்கள் ராஜ்யம் நடத்துகின்றன. இது பார்ப்பதற்குச் சுவாரசியமாக இருந்தாலும், கடலின் சமநிலையைச் சீர்குலைக்கும் ஒரு பெரிய ஆபத்து ஒளிந்திருக்கிறது. கடற்கரை உயிரினங்கள் நடுக்கடலுக்கு வருவது, அங்குள்ள மற்ற உயிரினங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கலாம். 1.8 டிரில்லியன் பிளாஸ்டிக் துகள்கள் கடலில் மிதக்கின்றன. இவை காலப்போக்கில் நுண் பிளாஸ்டிக்காக மாறி உணவுச் சங்கிலிக்குள் நுழையும் அபாயம் உள்ளது. நாம் தூக்கி எறிந்த ஒரு சாதாரண பிளாஸ்டிக் பாட்டிலோ அல்லது அறுந்த மீன்பிடி வலையோ, இன்று கடலின் நடுவே ஒரு புதிய நகரத்தையே உருவாக்கியிருக்கிறது. இயற்கையின் தகவமைப்புத் திறன் வியக்க வைத்தாலும், பிளாஸ்டிக் இல்லாத கடலே உண்மையான அழகு என்பதை நாம் மறக்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று உலகளவில் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தாலும், நாளுக்கு நாள் இதன் பயன்பாடு அதிகரிக்கும் சூழல் தான் உருவாகிறதே தவிர, அதன் பயன்பாட்டை குறைக்கும் சூழல் என்பது குறைவாகத்தான் இருக்கிறதே என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


