அரை நூற்றாண்டிற்குப் பிறகு நிலவை நோக்கி மனிதர்கள் சென்றுள்ள ஆர்டெமிஸ் II விண்கலப் பயணம், தற்போது உலகையே உற்று நோக்க வைத்துள்ளது. ஒருபுறம் பிரம்மாண்ட சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்த விண்கலத்தில், மறுபுறம் வீரர்களுக்கு ஒரு சிறிய 'தர்மசங்கடமான' சிக்கலும் ஏற்பட்டுள்ளது. அது என்ன? விரிவாகப் பார்ப்போம். 1972-ல் அப்பல்லோ 17 விண்கலத்திற்குப் பிறகு, நிலவைச் சுற்றி வர மனிதர்கள் சென்றிருப்பது இதுவே முதல் முறை. இந்த வரலாற்றுப் பயணத்தில் 3 அமெரிக்கர்களும் ஒரு கனடியரும் பயணித்து வருகின்றனர். இதில் சிறப்பம்சமாக, நிலவுக்குச் செல்லும் முதல் பெண்மணி என்ற பெருமையை கிறிஸ்டினா கோச்சும், முதல் கறுப்பின விண்வெளி வீரர் என்ற பெருமையை விக்டர் குளோவரும் பெறுகின்றனர். இவர்களுடன் ரீட் வைஸ்மேன் மற்றும் ஜெர்மி ஹேன்சன் ஆகியோரும் நிலவின் மர்மங்களை ஆராயப் புறப்பட்டுள்ளனர். History in the making In this new image from our @NASAArtemis II crew, you can see Orientale basin on the right edge of the lunar disk. This mission marks the first time the entire basin has been seen with human eyes. pic.twitter.com/iqjod6gqgz — NASA (@NASA) April 5, 2026 பூமியிலிருந்து சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, அப்பல்லோ 13 விண்கலத்தின் சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது ஓரியன் விண்கலம். இந்த பயணத்தின்போது, நிலவின் விளிம்பில் அமைந்துள்ள 'ஓரியண்டல் பேசின்' என்ற பிரம்மாண்ட பள்ளத் தாக்கை வீரர்கள் படம் பிடித்துள்ளனர். நிலவின் இந்தப் பகுதியை மனிதக் கண்கள் இவ்வளவு முழுமையாகப் பார்ப்பது வரலாற்றிலேயே இது தான் முதல் முறை என நாசா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. விண்கலம் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருந்தாலும், இடையில் ஒரு வினோதமான சிக்கல் எழுந்தது. விண்கலத்தில் உள்ள கழிப்பறை திடீரெனச் சரியாகச் செயல்படவில்லை. கழிப்பறை அமைப்பில் பனிக்கட்டிகள் அடைத்துக் கொண்டிருக்கலாம் எனப் பொறியாளர்கள் சந்தேகிக்கின்றனர். கழிப்பறை முழுமையாகச் சரிசெய்யப்படும் வரை, திரவக் கழிவுகளை (சிறுநீர்) வெளியேற்ற மாற்று ஏற்பாடாக 'யூரினை சேகரிக்கும் பைகளை' பயன்படுத்துமாறு நாசா கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சிக்கல் இருந்தாலும் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாகவும், உற்சாகமாகவும் உள்ளனர்; மிஷனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" எனத் திட்ட மேலாளர் ஜான் ஹனிகட் தெரிவித்துள்ளார். இந்த 10 நாள் பயணம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் விண்கலம் வந்து இறங்குவதுடன் நிறைவடையும். இது வெறும் ஆரம்பம் தான். 2028-ஆம் ஆண்டு நிலவின் தென்துருவத்தில் மனிதர்களைத் தரை இறக்கி, அங்கு மனிதக் குடியிருப்புகளை அமைப்பதற்கான நாசாவின் நீண்ட காலத் திட்டத்தின் மிக முக்கியமான முதல் படிதான் இந்த ஆர்டெமிஸ் II மிஷன்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


