சேலத்தில் பிரச்சாரத்தில் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் குறித்து பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆ.ராசா பேசியதாக வெளியான ஆடியோவில் உள்ள கருத்துக்கள் தற்போது தமிழகம் கடந்து இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த செய்தியைத் தான் சுட்டிக்காட்டியதற்கு தி.மு.க தரப்பில் முறையான பதில் அளிக்க முடியவில்லை என்று விமர்சித்தார். மேலும், இந்த ஆடியோவை வெளியிட்டவர் மீது அரசு ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்தால், அவர் அடுத்த ஆடியோவை வெளியிட்டுவிடுவார் என்ற பயத்தின் காரணமாகவே முதலமைச்சர் ஸ்டாலின் மௌனம் காப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தன் மீது வழக்கு தொடரப் போவதாக வரும் செய்திகளுக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அத்தகைய வழக்குகளைச் சந்திக்கத் தான் தயாராக இருப்பதாகவும், துணிச்சல் இருந்தால் தன் மீது வழக்குத் தொடருமாறு சவால் விடுத்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஆ.ராசா அந்த ஆடியோவில் குறிப்பிட்டதாகக் கூறப்படும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். கருணாநிதி உடல்நலம் குன்றியிருந்த காலத்தில் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவல் குறித்து, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டப்பூர்வமான விசாரணை நடத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்ததைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அதேபோல முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விவகாரத்திலும் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
துணிச்சல் இருந்தால் வழக்கு போடுங்கள் – ஆ.ராசா ஆடியோ சர்ச்சைக்கு ஈ.பி.எஸ் சவால்


