மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜனுக்கும், பாஜக நிர்வாகி குஷ்பூவுக்கும் இடையே உச்சக்கட்ட வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூடுபிடிக்கும் மதுரை மத்திய தொகுதி 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் மதுரை மத்தி தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சரான பழனிவேல் தியாகராஜனும், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சுந்தர்.சியும் களமிறங்குகின்றனர். இருவரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். பழனிவேல் தியாகராஜன் - சுந்தர்.சி இடையே மோதல் இந்த நிலையில் மதுரை தொகுதிக்கு நான் நினைத்ததை செய்ய முடியவில்லை என பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்க, அப்புறம் ஏன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள் என சுந்தர்.சி விமர்சிக்க இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சுந்தர்.சி மதுரை மத்தி தொகுதியின் அடிப்படை வசதிகள் பற்றி அடுக்கடுக்கான புகார்களை முன்வைக்க கொதித்தெழுந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், இத்தனை ஆண்டு கால என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தில், என்னை எதிர்த்தோ அல்லது எங்கள் கட்சியை எதிர்த்தோ தேர்தலில் போட்டியிட்ட எந்த மாற்றுக்கட்சியினரையும் நான் குறிப்பிட்டு விமர்சித்ததில்லை. ஆனால் மதுரைக்காக எதுவும் செய்யப்படவில்லை என தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் சில கொள்கையற்றவர்கள், பல கட்சிகள் தாவியவர்கள், தொகுதியைப் பற்றிய புரிதல் அற்றவர்கள், நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதையே அறியாதவர்கள், தரவு, வரலாறு, பகுப்பாய்வு என எதிலும் அடிப்படை அறிவு இல்லாதவர்கள், பணம் செலவழித்து பரப்பும் அத்தகைய புரட்டுக்களை உடைத்து உண்மையை வெளிப்படுத்துவது இப்போது என் அடிப்படை கடமையாகிறது. அதனால், இனி என் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் சினிமா சங்கிக்கு மதுரையைப் பற்றி அறிமுகப் பாடம் புகட்டப்படும்” என சரமாரியாக தனி மனித தாக்குதலை தொடுத்தார். குஷ்பூ பதிலடி - பிடிஆர் ஆவேசம் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாஜக பிரமுகரும், சுந்தர்.சி மனைவியுமான குஷ்பூ, ”வாதங்கள் சரிந்து விழும்போது எதிரில் இருப்பவர்கள் பதிலளிக்காமல் மாறாக தரம் தாழ்ந்த பேச்சுக்களை கையிலெடுக்கிறார்கள். திமுக தரப்பில் இருந்து வெளிப்படும் இவ்வகை கருத்துகள் தற்செயலானது அல்ல. இது ஒரு கலாச்சாரம். அவமரியாதையை இயல்பாக்கி, மிரட்டல்களையே நம்பி வாழும், பெண்களை மிகவும் இழிவான வார்த்தைகளால் மீண்டும் மீண்டும் குறிவைக்கும் ஒரு கலாச்சாரம். அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களின் உண்மையான மனநிலையையே அம்பலப்படுத்துகிறது. திமுகவைப் பற்றி நான் சொன்னது சரி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்ததற்கு நன்றி . அந்த நச்சுத்தன்மையிலிருந்து விலகிச் செல்வது ஒரு தேர்வு மட்டுமல்ல, அது ஒரு அவசியமுமாகும். நான் இனி ஒரு வார்த்தையைக்கூட வீணாக்கப் போவதில்லை. அவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும், அவர்கள் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் யார் என்பதை நிரூபிப்பார்கள்” என தெரிவித்தார். இதனால் மேலும் கடுப்பான பழனிவேல் தியாகராஜன் குஷ்பூ விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார். அதில், “தயவுசெய்து பாதிக்கப்பட்டவர் என்ற பாசாங்கு செய்வதை நிறுத்துங்கள். நான் சொன்னதில் அசிங்கம், மற்றும் வெட்கமற்ற தனிப்பட்ட தாக்குதல்கள் என்பது எங்கு இருக்கிறது? உங்களிடமிருந்தே ஆரம்பிக்கலாம். 1) நீங்கள் முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட 3 கட்சிகளுக்கு மாறியுள்ளீர்கள், அதனால் அரசியலில் இருப்பதற்கு உங்களுக்கு எந்தக் கொள்கை அடிப்படையும் இல்லை என்று நான் சொன்னேன். உங்கள் கணவரைப் பொறுத்தவரை, அவர் பல நாட்களாக இடைவிடாமல், என் மீது எல்லா விதமான குற்றச்சாட்டுகளையும் மறைமுகப் பேச்சுகளையும் சுமத்தி வருகிறார். அறியாமையைக் குறைப்பது சமூகத்திற்குச் செய்யும் சேவையாகும். அவர் காற்றை விதைத்தான். அவர் சூறாவளியை அறுப்பான். மதுரைக்கு நல்வரவு” என தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


