நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று வரைவு மசோதாவை தீ வைத்து எரித்தும் வீட்டு வாசலில் கருப்புக் கொடி ஏற்றியும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு என்ன காரணம்? இதன் பின்னணி என்ன? விரிவாகக் காணலாம். தொகுதி மறுவரையறை என்றால் என்ன ? மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை மாற்றி அமைப்பது, குறிப்பாக தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தொகுதி மறுவரையறை ஆகும். 1976ஆம் ஆண்டு இந்த நடவடிக்கை முடக்கிவைக்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறப்பான பணியாற்றிய மாநிலங்களுக்குக் கொடுக்கும் வெகுமதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் 2026-க்குப் பிறகு எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது மக்களவையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட 543 உறுப்பினர்கள் உள்ளனர். அரசமைப்புச் சட்டம் 550 பேர் வரை அனுமதிக்கிறது. இந்த நிலையில், மத்திய அரசு 850 தொகுதிகளாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இதில் 815 இடங்கள் மாநிலங்களுக்கும் 35 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளன. எனினும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இது முக்கியம், இதனால் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படாது என்று மத்திய அரசு சொல்கிறது. பிரச்சினையின் ஆணிவேர் எங்கே ? இந்தியா முழுவதும் மக்கள் தொகை ஒரே சீராக உயரவில்லை. உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள், மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியுள்ளன. தற்போது, புதிய மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், வடமாநிலங்களின் எம்.பி.க்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அதேசமயம், நாடாளுமன்றத்தில் தென்னிந்திய எம்.பி.க்களின் சதவீதம் கணிசமாகக் குறைந்துவிடும். இதனால் வட இந்திய மாநிலங்களில் வெல்லும் கட்சிகளே மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியும். இதைத் தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களுக்கான தேவைகளுக்கு மதிப்பு குறையும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் வாதம் என்ன ? தண்டனையா ?: மத்திய அரசின் பேச்சைக் கேட்டு, மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு வழங்கப்படும் "தண்டனையா இந்தத் தொகுதி மறுசீரமைப்பு? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். அரசியல் பிரதிநிதித்துவம் : நாடாளுமன்றத்தில் வடமாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் குரல் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் முற்றிலுமாக பலவீனமடையும். கூட்டாட்சிக்கு ஆபத்து : இது வெறும் எம்.பி.க்கள் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல; நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதையும், மத்திய நிதியைப் பெறுவதையும் இது கடுமையாகப் பாதிக்கும் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்

