திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி வரகனேரி த.செவந்திலிங்கம் முத்திரியர் உயர்நிலைப்பள்ளியில் தனது மனைவி ஜனனியுடன் வந்து ஜனநாயக கடமை ஆற்றினார். மக்களோடு மக்களாக வரிசையில் 30 நிமிடங்கள் காத்திருந்து வாக்களித்தார். அதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பார்கள்; எனது தாய் வீடான திருவெறும்பூர் தொகுதி மக்களின் தீர்ப்பு, அவர்களின் வீட்டுப் பிள்ளையான இந்த மகேஷுக்கே சாதகமாக அமையும். “நான் திருவெறும்பூர் தொகுதியில் முதல் முறை போட்டியிட்டபோது என்னை தி.மு.கவினர் அழைத்துச் சென்று வாக்குகள் சேகரிக்க வைத்தனர். அதற்கடுத்த தேர்தலில் பொது மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்றபோது, கடந்த முறை நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று என்னை வழிமறித்து உரிமையுடன் கேட்டனர். ஆனால் தற்போது 3-வது முறையாக நான் போட்டியிடுகிறேன். என்னை பொதுமக்கள் வரவேற்று, நாங்கள் கொடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறீர்கள். அதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். ஆனாலும் எங்களுக்கு சில தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றி கொடுங்கள் என்று உரிமையுடன் மனுக்களை கொடுக்கின்றனர். நான் வெற்றி பெற்ற பிறகு கண்டிப்பாக உங்களுக்கு நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று அவர்களிடம் வாக்குறுதி அளித்து இருக்கிறேன். தி.மு.க அரசின் சாதனைகள் மற்றும் நான் தொகுதிக்கு செய்திருக்கின்ற மக்கள் நலத்திட்டங்கள் காரணமாக நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். தமிழக முதல்வரின் ஓய்வறியா உழைப்பிற்குத் தமிழகப் பெண்களும், தாய்மார்களும் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். பெண்களின் ஆதரவு எந்த இயக்கத்திற்கு இருக்கிறதோ, அந்த இயக்கத்தின் வெற்றி உறுதி. தமிழக முதல்வர் கூறியது போல, வரவிருக்கும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக புதிய வரலாறு படைக்கும் என்பது நிச்சயம். ஸ்டாலின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பார் என உறுதிபடத் தெரிவித்தார். திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு, "திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மக்களுடன் நெருங்கி பழகக் கூடியவர். அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கேற்க கூடியவர். எனவே அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார். செய்தி: க.சண்முகவடிவேல்
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



