பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம்; 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மரணம்!!

0
513

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்ததுடன் 2 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 10.55 மணியளவில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கையில் இருந்த ஆயுதத்தை பறித்து கொண்டு நிலையத்திலிருந்த நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 பேர் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தனது வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.

அதன் பின்னர் சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வேறு நிலையங்களிலிருந்து பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர் .

பின்னர் படையினருடன் இளைஞர்களும் இனைந்து காயப்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தனர் .

மேலதிக சிகிச்சைக்காக நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 2 பேர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை பாண்டிருப்பை சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் சார்ஜெண்ட் , இரண்டு T56 ரக துப்பாக்கிகள் மற்றும் 19 துப்பாக்கி ரவைகள் என்பவற்றுடன் அத்திமலை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here