காதலித்த இளைஞன் திருமணம் செய்ய மறுத்ததாக தெரிவித்து யுவதி ஒருவர் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் நேற்று (30) வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தாய், தந்தையரை இழந்த நிலையில் வவுனியாவில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த 23 வயது யுவதி ஒருவரை அவரது உறவினரான பெண் ஒருவர் அழைத்து சென்று நேரியகுளம் பகுதியில் தன்னுடன் வைத்திருந்துள்ளார்.
இதன்போது வவுனியாவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்த குறித்த யுவதி மதவுவைத்தகுளம் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தனிமையில் தங்கியிருந்துள்ளார்.
இதன்போது தொலைபேசி மூலம் அறிமுகமாகிய வவுனியா, புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஒருவருடன் 2 வருடமாக காதலித்து பழகியுள்ளார்.
குறித்த ஆணை திருமணம் செய்யுமாறு யுவதி கோரிய நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், பிறிதொரு பெண்ணை பதிவு திருமணம் செய்து விட்டதாக அந்த யுவதியிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த யுவதி நஞ்சு மருந்து அருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.