மூச்சுத் திணறல் காரணமாக ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) பதிவாகியுள்ளது.
காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்ட நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அச்சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
திருகோணமலை-அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த தினுகி சத்ஷரணி (6 – வயது) என்பவரே மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த நான்கு நாட்களாக தடிமன், காய்ச்சல் ஏற்பட்டதாகவும் நெஞ்சில் சளி பிடித்திருந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் குறித்த சிறுமியின் தாயார் தெரிவித்தார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை திங்கட்கிழமை (06) முன்னெடுக்க உள்ளதாகவும் வைத்தியசாலையில் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.