பெலாரஸ் நாட்டு எல்லையில் உயிரிழந்த கிளிநொச்சி குடும்பஸ்தரின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு.!

0
230

பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட வட்டக்கச்சியைச் சேர்ந்த இளம் குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று (19) செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

பிரான்சிற்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற 40 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருந்தார்.

கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட குறித்த நபரது சடலம் கடந்த சனிக்கிழமை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு வட்டக்கச்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளது.

பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஷ்யா சென்று அங்கிருந்து பெலராஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக பெலராஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்ற போது உடல் நிலை பாதிக்கப்பட்டு பெலராஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெலராஸ் எல்லையில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வட்டக்கச்சியில் உள்ள மனைவியை தொடர்பு கொண்டு தன்னால் நடக்க முடியாதுள்ளது என்றும் தன்னை யாரேனும் காப்பாற்றினால் அன்றி உயிர் தப்ப வேறு வழியில்லை என்றும் தெரிவித்தாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

அதுவே அவர் இறுதியாக தொடர்பு கொண்டு பேசியது என்றும் உறவினர்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here