ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டெவில். இத்திரைப்படத்தின் நாளை வெளியாக உள்ள நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பூர்ணா, டெவில் திரைப்படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாது படம் என்றார்.
சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படமான டெவில். இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட மிஸ்கின் இத்திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
இத்திரைப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் இப்படம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பூர்ணா, இந்த படத்தில் நடிக்கும் போது என் குடும்பத்தோடு இருப்பது போலத்தான் எனக்கு இருந்தது. இந்த படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது தான் எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது. இதனால், டெவில் படத்தை என்னால் மறக்கவே முடியாது. இந்த படத்தில் ஒரு பாடல் காட்சி எடுத்துக்கொண்டு இருக்கும் போதுதான், எனக்கு தலைசுற்றல் வந்தது. அப்போது தான் நான் கர்ப்பமாக இருப்பது எனக்கு தெரிந்தது.
நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்து அனைவரும் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்கள். அப்போது, பைக்கில் செல்லும் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது, அருண் ரொம்பவே பயந்து போய் பூர்ணா ஓகேவா… ஓகேவா என கேட்டுக்கொண்டே இருந்தார். அப்படி டெவில் திரைப்படம் எனக்கு நல்ல நினைவுகளை கொடுத்து இருக்கிறது என்று நடிகை பூர்ணா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.