கிளிநொச்சி – ஆனையிறவு விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு.!

0
214

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் சதீஸ்குமார் (வயது-25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இருந்து இரணைமடுவுக்கு மாடுகளை கொண்டு சென்றுள்ளார். இதன்போது வீதியால் வந்த அரச பஸ் குறித்த நபரையும் அவரது 8 மாடுகளையும் மோதிவிட்டு தவறான பக்கத்துக்கு சென்று எதிரே வந்த ஹையேஸ் ரக வாகனத்தையும் மோதியது.

இதன்போது 8 மாடுகளும் குடும்பப்பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். அரச பஸ் சாரதி அளவுக்கு அதிகமான மது போதையில் காணப்பட்டதாக மரண விசாரணைகளின் போது பொலிஸார் தெரிவித்தனர். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here