உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தைச் சேர்ந்த தம்பதி அபிஷேக் – அஞ்சலி. இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த நிலையில், நேற்று அபிஷேக் – அஞ்சலி தம்பதி டெல்லியில் இருக்கும் வனவிலங்கு பூங்காவுக்குச் சென்றிருக்கின்றனர்.
அங்கு அபிஷேக்குக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே, அஞ்சலி நண்பர்களை அழைத்து, அபிஷேக்கை குரு தேக் பகதூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து, சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அபிஷேக் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய உடல் இரவு ஒன்பது மணிக்கு காஜியாபாத்தில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் கொண்டுவரப்பட்டது. உடல் அருகில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த அஞ்சலி, திடீரென ஓடிச் சென்று ஏழாவது மாடியிலிருந்து குதித்திருக்கிறார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சையிலிருந்த அஞ்சலி, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.