கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சர்தக் தாஸ் (30). புகைப்படக் கலைஞராகவும், பார்ட் டைமில் கேப் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் 32 வயதான சங்கதி பால் என்ற பெண் அறிமுகமாகியிருக்கிறார். சங்கதி பால் ஏற்கெனவே திருமணம் முடித்து விவாகரத்தானவர்.
இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. சர்தக் தாஸ் – சங்கதி பால் ஆகிய இருவரும் நட்பாகப் பழகி கடந்த ஒரு வருடமாக ஒரே வீட்டில் வசித்து லிவ்-இன் முறையில் வசித்து வந்தனர்.
சங்கதி பாலின் குழந்தையும், சர்தக் தாஸுடன் இருந்தது. இந்த நிலையில் சங்கதி பால் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு தன் லிவ்-இன் பார்ட்னரைக் கொலை செய்து விட்டதாகத் தெரிவித்தார்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, சர்தக் தாஸை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. அங்கே அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சங்கதி பாலை காவல்துறை கைது செய்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி, `இருவரும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறார்கள். இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்படும் என அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடந்த அன்று சர்தக் தாஸ் ஒரு திருமண விழாவுக்குச் சென்று திரும்பியபோது குடித்துவிட்டு வந்திருக்கிறார்.
இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் இந்தக் கொலைச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. குழந்தையை சங்கதி பாலின் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம். விசாரணை நடந்து வருகிறது” எனக் குறிப்பிட்டார்.