அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக இடம்பெற்ற மரதன் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இதேவேளை அதிகாரிகளை இன்றைய தினம் செவ்வாய் கிழமை அழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக நேற்று காலை இடம்பெற்ற மரதன் போட்டியில் பங்கேற்றிருந்த குறித்த மாணவன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வான நிலையில் மாணவனின் உயிரிழப்புக்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என மாணவர்களும், இளைஞர்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.