மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை காட்டை அண்டிய பகுதியில் துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) மாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை செம்மன்ஓடையைச் சேர்ந்த 32 வயதுடைய அத்துல் காதர் இம்தியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் அவரது நண்பருடன் இரவு உணவுக்காக கொக்கு இறைச்சியை கொண்டுவருவதற்காக, வீட்டிலிருந்து அரச அனுமதி பெற்ற சொட்கண் துப்பாகியுடன் வேட்டையாட சென்றுள்ளதுடன் கொக்குகளை குறிபாத்து சுட எத்தனித்த போது துப்பாகி வெடித்து, கழுத்துபகுதியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அவருடன் கூடச் சென்றவர் பொலிஸாருக்கு தெரியப்படுத்திய தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுத்துள்ளதுடன், சந்தேகத்தில் அவருடன் சென்ற நண்பனான 52 வயதுடைய ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.