எல்பிட்டிய பிரதேசத்தில் 17 வயது யுவதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் உயிரிழந்தவரின் மைத்துனரான சுதேஷ் பிரியங்கர என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கொலை செய்யப்பட்ட யுவதி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தமையினால் கொலை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், சந்தேக நபரை எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குிமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எல்பிட்டிய தலாவ பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் 17 வயது சிறுமியின் சடலம் கடந்த 9 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தது.
கரந்தெனிய, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நதிஷானி, என்ற யுவதியே அவரது மைத்துனரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இவரது சகோதரி எல்பிட்டிய மண்ணகந்த பகுதியில் வசித்து வந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளை பராமரிப்பதற்காக ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ஹன்சிகாவை அந்த வீட்டிற்கு அழைத்துள்ளார்.
தனது சகோதரியின் இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு, க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்த சிறுமிக்கும், அத்தானுக்கும் காதல் ஏற்பட்டது. சிறுமியின் மூத்த சகோதரியையும், இரண்டு குழந்தைகளையும் கைவிட்ட அத்தான், சிறுமியுடன் ஓடிச்சென்று, பிறிதொரு பிரதேசத்தில் தலைமறைவாக வாழ்க்கை நடத்தியுள்ளார்.
4 மாதங்கள் இருவரும் குடும்பம் நடத்திய பின்னர், கடந்த மாதம் தலாவ பகுதியிலுள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று, அங்கு குடிவந்தனர். அத்தான் இல்லாத சமயத்தில் தனது தாயாருக்கு தொலைபேசியில் தகவல் வழங்கிய சிறுமி, அத்தான் இல்லாத சமயத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு இரு தரப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர். கடந்த 8ஆம் திகதி பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற சிறுமி, அத்தானால் கடத்தி செல்லப்பட்டிருந்தார்.
பின்னர், 9ஆம் திகதி கழுத்து அறுத்து கொல்லப்பட்டிருந்தார். சந்தேக நபர் அளித்த வாக்குமூலத்தில், சிறுமி வேறு ஒருவருடன் உறவில் இருந்ததால் கொலை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.