மட்டக்களப்பு – காத்தான்குடி ஆரையம்பதி பகுதியில் நீர் வாளியினுள் வீழ்ந்து 2 1/2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்கடித்துறை, ஆரையம்பதி பகுதியில் சிறுமி ஒருவர் நீர் வாளியினுள் தவறுதலாக வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.
மாவிலங்கடித்துறையில் கடந்த திங்களன்று தனது வீட்டு முற்றத்தில் சகோதரர்களுடன் விளையாடிய இரண்டரை வயதுச் சிறுமியைக் காணாது தேடிய தாயார், வீட்டு முற்றத்தில் இருந்த நீர்நிறைந்த வாளியினுள் சிறுமி வீழ்ந்து கிடப்பதைக் கண்டு, உடனேயே, ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவானின் பணிப்புரைக்கமைவாக, காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன், ஆரையம்பதி வைத்தியசாலைக்கு சென்று பிரேதத்தை பார்வையிட்ட பின்னர். உடற்கூற்று பரிசோதனைக்காக மட். போதனா வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிஸாருக்கு அறிவித்தார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் செவ்வாய்கிழமை (09) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.