இலங்கையில் எதிர்வரும் மாத இறுதியில் அரிசிக்கான பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, அதன் தலைவர் முதித்த பெரேரா இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
பால்மா, எரிவாயு போன்றே அரிசிக்கும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் கூறுகின்றார்.
ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 75 ரூபா வழங்குவதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும், இந்த வருடத்தில் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்ய முடியும் என தாம் எதிர்பார்க்கவிலலை என அவர் குறிப்பிடுகின்றார்.
தனியார் துறையினர் ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 95 ரூபா வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போதுமானளவு நெல் கிடைக்காத பட்சத்தில், நெல்லின் விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் ஒரு கிலோகிராம் நெல் 120 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
சந்தையில் ஒரு கிலோகிராம் நாட்டரிசி 165 ரூபா முதல் 170 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாறான நிலைமை தொடருமாக இருந்தால், எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 300 ரூபா வரை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.