வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த நிலையில் அவரது தந்தை படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்….
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த தந்தையும் மகளும் அவ்வீதியால் வந்துகொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அதில் ஏறமுற்பட்டுள்ளனர்,
இதன்போது வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து குறித்த இருவரையும் மோதியுள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் பேருந்திற்காக காத்திருந்த சிவசுப்பிரமணியம் சிந்துயா வயது 33 என்ற பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரவூர்த்தி அதிக வேகமாக வந்தநிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா கனகராஜன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.