ரஷ்யா – உக்ரைன் மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு நாடுகளிலுள்ள உக்ரைனியர்கள் யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இலங்கையில் சுமார் 4 ஆயிரம் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இவர்கள் 30 நாட்களுக்கான விசாவைப் பெற்றே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை வந்துள்ள உக்ரைனிய பெண்ணொருவர் நேற்று கண்டியில் போராட்டத்தில் ஈடுபட்டார். யுத்தம் வேண்டாம் என்ற பதாதைகையுடன் தனியொருவராக கோஷம் எழுப்பினர்.
குறித்த பெண்ணின் செயற்பாடு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சுற்றுலா பயணிகளும் அவதானித்தனர். இலங்கையில் அதிகளவான ரஷ்ய சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று முன்தினம் கொழும்பில் ஒன்று கூடிய உக்ரைனிய பிரஜைகள் யுத்தத்தை நிறுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனிய சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உக்ரைனில் தற்போது போர் மூண்டுள்ளதால், நாடு திரும்ப முடியாத உக்ரைன் பிரஜைகளுக்கு விசா கால எல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எனினும், விசா காலம் முடிவடைந்த பின்னர், நாடு திரும்ப விரும்பும் உக்ரைன் பிரஜைகளை, நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இலங்கையிலிருந்து உக்ரைனுக்கு நேரடி விமான சேவை இல்லாமையால் வேறு நாடுகளின் ஊடாகப் பயணிக்கும் விமானங்களின் மூலம் சுற்றுலாப் பயணிகள் அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.