இலங்கையில் குருநாகல், கொக்கரல்ல பகுதியிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த இருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை தொடர்பில், நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
59 வயதான ஆணொருவரும் 57 வயதான பெண்ணொருவருமே அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து நேற்று (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் குருநாகல் பகுதியில் இருந்து வருகைத் தந்து விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
இவர்கள் இரவு தங்களுடைய உணவு தேவைக்காக பயன்படுத்திய பாபிகியுவ் என்று கூறப்படும் இயந்திரத்தை, தங்களை குளிரிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக, அறைக்குள் வைத்து நித்திரைக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, அந்த இயந்திரத்தில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .
உயிரிழந்தவர்களின் சடலம் இன்று (27) காலை நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகள் இடம் பெற்றதன் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக நுவரெலிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு சம்பவம் நுவரெலியாவில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.