காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியில், இலங்கை போக்குவரத்துசபையை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தியமைக்கு இலங்கை போக்குவரத்துசபை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நடேஸ்வரா கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்றுமுன்தினம் புதன்கிழமை (13) அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
பாரதி, வள்ளுவர், கம்பர் என மூன்று இல்லங்கள் வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெற்றது. இதில் பாரதி இல்லம் 696 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.
இல்ல அலங்கரிப்பில் இலங்கை போக்குவரத்து சபையினரின் பொறுப்பற்ற செயல்பாடுகளினால் ஏற்படும் விபத்தினை தத்துரூபமாக காட்டும் இல்லம் ஒன்று அலங்கரித்திருந்தது.
இந்த இல்லத்தின் படங்கள் சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் பரவி இருந்தன, பின்னர் இது தொடர்பில் இலங்கை போக்குவரத்துசபையின் யாழ் சாலை முகாமையாளர் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்,
இலங்கை போக்குவரத்துசபையின் யாழ் சாலை முகாமையாளர், இது தொடர்பில் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.