அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய ஔித் திலகம்; பார்த்து மெய்சிலுர்த்த பக்தர்கள்.. இதோ வீடியோ

0
91

இந்தியாவின் உத்தரபிரதேசம், அயோத்தியில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9 ஆவது நாளான இன்று (17) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

இன்று பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் நிகழ்வு நடைபெற்றது. சூரிய கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் இரண்டு, இரண்டரை நிமிடங்கள் நிகழ்வு நீடித்தது. சூரிய திலகத்தின் நீளம் சுமார் 58 மி.மீ வரை இருந்தது. இந்த நிகழ்வு அயோத்தியின் 100 இடங்களில் பெரிய LED திரையில் திரையிடப்பட்டன.

கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களின் உதவியுடன் இந்த சூரிய திலகம் விழுவது சாத்தியப்படுத்தப்பட்டது. இந்திய வான் இயற்பியல் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, ரூர்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் விஞ்ஞானிகள் இந்தப் பொறியியல் முறையை உருவாக்கி உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் ராம நவமி அன்று சூரிய கதிர்கள் ராமரின் நெற்றியில் விழும்படியாக Optomechanical அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. என்றாலும், சூரியனின் கோணங்களுக்கு ஏற்ப கண்ணாடி மற்றும் லென்ஸில் சிறிய மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்.

இதனிடையே, அயோத்தியில் ராமர் நெற்றியில் சூரிய ஒளி விழுந்த நிகழ்வை விமானப் பயணத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனது Tab-இல் பார்த்து வழிபட்டுள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here