முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் நேற்று(25) இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் குறித்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் தடையவியல் பொலீசார் தடையங்கள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டுள்ளார்கள்.
வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்தின் போது 19 அகவையுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் 20 அகவையுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெடி விபத்து குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மற்றும் தடையவியல் பொலீசார்கள் ஆய்வினை மேற்கொண்டுள்ளதுடன் வெடிப்பின் தன்மை தொடர்பிலும் அறிக்கை சமர்பித்துள்ளார்கள் தடையவியல் பொலீசாரின் முதற்கட்ட தகவலின் படி நிலத்திற்கு கீழ் பகுதியில் இருந்த வெடிபொருளே வெடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வெடிபொருளின் தன்மை தொடர்பில் தடையங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் உடலினை மாவட்ட நீதவான் பார்வையிட்டுள்ளதுடன் மரண விசாரணைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெடிவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.